அந்த சின்ன அறை தொலைக்காட்சி குழுவினரால் குழுமி இருந்தது. ‘பரியேறும் பெருமாள் ‘ படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் செய்தியாளரின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
மதியம் மணி 1 கடந்து விட்டது.
“எல்லோரும் சாப்பிட்டுவிட்டு பேசலாமே !” இயக்குநரின் அன்பு அழைப்பை மறுக்க மனமின்றி மதிய உணவை முடித்தனர்.
சற்று ஓய்வு தேவைப்படுமல்லவா?
அந்த சிறிய இடைவெளியில் அவருடன் …
இந்த சமுதாயத்துக்கு நல்லதை சொல்லியாக வேண்டும் என்கிற உணர்வு பேச்சில் இருந்தது.
“நான் அடுத்துப் படம் பண்ணுவது இந்தியில். மிகவும் பிரமாண்டமாக இருக்கும். வரலாறு சார்ந்த படம். உலகுக்கு சொல்லவேண்டிய உண்மைக் கதை. சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய படமாக அமையும்” என்றார்.
“பரியேறும் பெருமாள் ?”
“எனது தயாரிப்பில் இளையவர் மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். வணிகரீதியாகவும் இருக்கும்.கருத்தும் இருக்கும் .சமூக விழிப்புணர்வும் இருக்கும் .இந்த கதையில் கருப்பி என்கிற நாய்க்கு முக்கியமான இடம் இருக்கிறது” என்றார் இரஞ்சித்.