பிரமாண்டங்களின் பிரம்மபுத்திராவே நம்ம ஷங்கர் தான்! கற்பனைகள் வற்றாத ஜீவநதி.! அந்த நதியே ஒருவரை பார்த்து வியக்கிறது என்றால் அது இமயமலையின் மடி தேடும் ரஜினியாகத்தானே இருக்க முடியும்?
2.0 படத்தைப் பற்றிய அறிவிப்பு வந்து இத்தனை வருடங்களாகியும் ரசிகன் இன்னும் இளைத்துப் போகவில்லையே! அவனுக்கு அலுக்கவில்லை என்பதே ஆச்சரியம்தான்!. தயாரிப்புத் தரப்பும் களைத்து விடவில்லை. பணத்தைக் கொண்டு வந்து கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எங்கிருந்துதான் கறக்கிறார்களோ! காமதேனு அவர்களின் கஸ்டடியில் இருக்கோ என்னவோ!
இந்த படத்துக்கான வி எப் எக்ஸ் ஷாட்ஸ் மட்டும் இரண்டு லட்சம் என்கிறார்கள். யம்மாடியோவ்! இந்திரன் வந்து எட்டு வருஷம் ஆச்சு. இன்னமும் பார்ட் டூ வந்தாகவில்லை.!
ஷங்கர் என்ன சொல்கிறார்.
“பொதுவா இரண்டாம் பாகம் எடுக்கிறவர்கள் அவசரப்பட்டு படப்பிடிப்பில் எறங்கி விடுவார்கள். பல நாட்கள் வேலை இல்லாமல் இருக்கும். அந்த மாதிரி வேலை எல்லாம் என்னிடம் இல்லை. சிறப்பாக வரணும். கதைக்காக எட்டு வருஷம் உழைச்சிருக்கிறேன்.செய்திகள் ,மக்களின் கருத்துகள் இதையெல்லாம் கதை உருவாவதற்கு உதவியாக இருந்திருக்கு. ரகுமானின் பாடல்தான் தலைப்பு வைப்பதற்கு உதவியாக இருந்தது.
மனிதன் இல்லாத ஒரு கேரக்டர் படத்தில் இருக்கு. அக்ஷய்குமார்தான் அந்த கேரக்டர். வானத்தில் மொபைல் போன்கள் ஒன்னா சேர்ந்து ஒரு உருவமா வந்தால் எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை பண்ணினேன். அது அக்ஷய் குமாராகி விட்டது.
ரஜினிசார் மிகவும் ஒழுக்கமான மாணவன் மாதிரி.!67 வயசானவர் மாதிரியே இல்லை,உலக மகா பொறுமைசாலி . பல இடங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து நமக்கே உடம்பு சூடாகிவிடும்” என்கிறார் ஷங்கர்.