உலகநாயகன் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில்,‘உங்கள் நான்’ என்ற இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தற்போது நடந்து வருகிறது.
இந்நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்து கொண்டுள்ளது நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்துள்ளது. .நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உலகநாயகன், அவர் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற ‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ என்ற பாடலை பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார்,பிரபு,பிரபுதேவா,டான்ஸ் மாஸ்டர் சுந்தரம்,கார்த்தி,விக்ரம்பிரபு, விஜய் சேதுபதி மற்றும் ராதா,அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த விழாவை முன்னிட்டு இணையத்தில், கமல் 60 என்ற ஹேஷ்டேக்கும், உங்கள் நான் என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஹேஷ்டேக்குகள் சென்னை ட்ரென்டிங்கில் டாப்பில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜாவும் கமலஹாசனும் ஒன்று சேர்ந்து பணியாற்றியபோது நடந்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களையம் பகிர்ந்து கொண்டனர்.மேலும் ஒரு பாடலை பாடுவதற்கு முன்பாக அந்த பாடல் உருவான கதையையும் மற்றும் அந்த பாடலின்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் இசைஞானி இளையராஜா குறிப்பிட்டார்.
கமல் ஒருமுறை என்னை சந்தித்து ஒரு படத்தின் கதையைச் சொல்லி,என்னை பணியாற்றுமாறு சொன்னார்.ஆனால் அந்த படம் முழுக்க,வெட்டு, குத்து ரத்தம் தான்.அதனால் நான் பண்ண மாட்டேன் என மறுத்து விட்டேன். ஆனால், கடைசியில் நானே அந்த படத்தை பண்ண வேண்டியதாயிருச்சு. அதற்கு காரணம் இப்பொழுது நான் பாடப் போற பாட்டுதான் என்று சொன்ன இசைஞானி, விருமாண்டி படத்தில் இடம்பெற்ற ‘உன்ன விட’ என்ற பாடலை பாடினார். அந்தப்பாடல் இருந்ததால்தான் விருமாண்டி படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்டேன் எனக்கூறி சிரித்தார்.