லாக்டவுனுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, 50 நாட்களுக்கு மேலாக திரைப்பட துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. 50 படங்களுக்கு மேல் தடைபட்டு, ஏறக்குறைய 500 கோடி ரூபாய் முதலீடு முடங்கியுள்ளது. தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்க முடியாவிட்டாலும், போஸ்ட்-புரொடக்சன் பணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று முதலமைச்சரிடம் பெப்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து தமிழக அரசு, (இன்று)11 ஆம் தேதி முதல், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்க அனுமதி அளித்தது. அதன்படி ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2, விஷால் நடித்துள்ள சக்ரா, திரிஷா நடிக்கும் ராங்கி ஆகிய படங்களின் எடிட்டிங், கபடதாரி, யோகிபாபு நடித்துள்ள காவி ஆவி நடுவுல தேவி ஆகிய 5 படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று தொடங்கியுள்ளன.நாளை சிவகார்த்திகேயனின் டாக்டர்,விஜயின் மாஸ்டர்,பேய்மமா,கும்கி-2 உள்ளிட 11 படங்களின் பட வேலைகள் தொடங்கபட உள்ளன.
இது குறித்து பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ் திரைப்பட பணிகள் 52 நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பு அல்லாத மற்ற பணிகள் இன்று தொடங்கப்பட்டன. தமிழக அரசு விதித்துள்ள முக கவசம், கையுறை, கிருமிநசினி மற்றும் சமூக இடைவெளி ஆகிய நிபந்தனைகளுடன் ,இன்று காலை ஒலிப்பதிவு, படத்தொகுப்பு ,கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் கமல் நடித்து வரும் இந்தியன்2 உள்ளிட்ட5படங்களின்
படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பணிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம், யாராவது ஒருவர் விதிமுறையை பின்பற்றா விட்டாலும் அல்லது தொற்று ஏற்பட நமது உறுப்பினர்கள் யாராவது ஒருவர் காரணமாக இருந்தாலும், நமக்கு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து, அனைவரும் விதிமுறையை பின்பற்றி பணி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பணியின் தன்மை, பணிபுரியும் தொழிலாளர்கள் விவரம், பணியாளர்கள் பணிபுரியும் இடம், ஆகிய விவரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டி இருப்பதால், அனைத்து சம்மேளன உறுப்பினர்களும் தங்களின் விவரம் தொழில்நுட்பக் கலைஞர்களின் பணியின் விவரம் பணியின் தன்மை ஆகியவற்றை தங்களது சங்கங்கள் மூலம் சங்கத்திற்கு அனுப்பிய பிறகு பணிக்குச் செல்ல வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம், தமிழ் திரைப்படத்துறைக்கு படப்பிடிப்பு அல்லாத பணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ் திரைப்படத்துறை சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்அறிக்கையில் கூறியுள்ளார்