இருவேறு சமூகத்தை சேர்ந்த மேலத் தெரு மூர்க்கசாமியும் (அருள் நிதி), கீழத்தெரு பூமிநாதனும் (சந்தோஷ் பிரதாப்) பால்ய காலத்து நண்பர்கள். இதில் பூமிநாதன் படித்த பண்புள்ளவர், மூர்க்கசாமி படிக்காத முரட்டுத்தனமான குணம் கொண்டவர். இவர் நண்பனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர். இவருடைய அப்பா, முத்து வழி விட்டானும் (யார் கண்ணன்), முனியராஜூம் (ராஜசிம்மன்) அரசியல் சுய லாபத்துக்காக பூமிநாதனை கொல்லத் திட்டம் தீட்டுகிறார்கள். அவர்கள் திட்டமிட்டபடி கொலை செய்தார்களா? மூர்க்கன் என்ன செய்தார்? என்பதே கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் கதை.
வழக்கமான சாதியப்படம் தான் இந்த கழுவேத்தி மூர்க்கனும். அதிலும் கடந்த வாரம் சாந்தனு நடிப்பினில் வெளியான ‘ராவண கோட்டம்’ படத்தின் சாயல் முழுக்க.. முழுக்க.. அப்படியே இருக்கிறது. இருந்தாலும், சற்றே சுவாரசியத்தினைக் கூட்டி ஒரு சாதிய அரசியல் ஆக்ஷன் அதிரடிப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.
மீசை வைக்கிறதுக்கே சாதி தேவை படுது, கொல பண்றது வீரம் இல்ல, நம்ம வீட்டு ஆளுகளோட சேருங்கடா போன்ற, வலிமையான வசனங்கள் சாதிய ஆதிக்க பாகுபாட்டினை கண்முன் நிறுத்துகிறது.
போலீஸ் உயரதிகாரி சரத் லோஹிதஸ்வா, இன்ஸ்பெக்டர் பத்மன் இருவருக்குமான டைலாக்ஸ் கைதட்டல்களை பெறும்.
அருள்நிதி, துஷார விஜயன் இருவருக்குமான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளை பொறுத்தவரை அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்த முதல் காட்சியில் தொடங்கி கடைசி காட்சிவரை நடிகர்களின் பங்களிப்பு சிறப்பானதாக இருக்கிறது. படிக்காமல், சண்டித்தனம் செய்துகொண்டு புல்லட்டில் சுற்றித் திரியும் கதாபாத்திரத்தில் அச்சு அசலாக பொருந்தியிருக்கிறார், அருள்நிதி. நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். க்ளைமாக்ஸ் நெருங்கும் போது பூமிநாதன் அம்மாவிடம் அவர் பேசும் காட்சி, கண்களில் நீர் கசியச்செய்யும். அடிதடிகாட்சிகளில் ஆக்ரோஷம் காட்டுகிறார். திருவிழா சண்டைக்காட்சி மிரட்டல்!
சமூக வரையறைக்கு பயப்படாத கிராமத்து பெண்ணாக கவிதா கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார், துஷாரா.
ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் பொறுப்புள்ள இளைஞனாக சந்தோஷ் பிரதாப், கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.
‘உண்மை’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள முனிஷ்காந்த், காவல் துறை அதிகாரியிடமும், வங்கி மேலாளரிடமும் பேசும் வசனங்கள் மாஸ்!
யார் கண்ணன், ராஜ சிம்மன் இருவரும், அரசியல்வாதிகளை அப்படியே தங்களது நடிப்பின் மூலம் நம் கண்முன் நிறுத்துகிறார்கள்,
ஒளிப்பதிவும், இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.
மொத்தத்தில், வழக்கமான கிராமத்து சாதிய அரசியல் பின்னணியில் வெளிவந்திருக்கும் படம்!