பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம், ‘டக்கர்’ கார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சித்தார்த் நாயகனாக நடிக்க,திவ்யன்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் பேசுகையில், “ ‘டக்கர்’ பட இயக்குநர் கார்த்திக் இந்தப் படத்திற்காக என்னை சந்தித்தபோது, சில விஷயங்கள் எனக்கு ஹைலைட்டாக தோன்றியது. எந்த இடத்திலும் நிற்காத ஸ்பீடான ஒரு படம் இது. ’டக்கர்’ என இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் பார்டர் தாண்ட தாண்ட மாறிக் கொண்டே இருக்கும்.
வட இந்தியாவில் ‘டக்கர்’ என்றால் போட்டி, சில ஊர்களில் ஸ்மார்ட்டாக இருப்பதை ‘டக்கர்’ என சொல்வார்கள். மோதல், சூப்பர் என பல அர்த்தம் உண்டு. இந்தப் படத்தில் ‘டக்கர்’ பயன்படுத்தியதன் காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான க்ளாஷ் தான் அது. சமீபகாலத்தில், சினிமாவில் வந்த கதாநாயகிகள் கதாபாத்திர வடிவமைப்பில் இது வித்தியாசமாக எனக்கு பட்டது. ’ பணக்காரன் ஆக வேண்டும். ஆனால், அது முடியவில்லை எனும்போது இளைஞர்களுக்கு வரும் கோவம் தான் கதாநாயகனுக்கும். ’உங்களை இதுவரை சாஃப்ட்டாகதான் பார்த்திருப்பார்கள்.
இதில் ரக்கட்டாக பார்த்தால் வித்தியாசமாக இருக்கும்’ என இயக்குநர் சொன்னார்.இந்தப் படம் முழுக்க முழுக்க கமர்ஷியல் படம்தான்.நடிகர் யோகிபாபு, கதாநாயகி திவய்ன்ஷா, சீனியர் ஹீரோ அபிமன்யு, முனீஷ்காந்த், விக்னேஷ்காந்த என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ‘உடலுறவு வேண்டுமனால் வைத்துக் கொள்ளலாம், கல்யாணம் எல்லாம் வேண்டாம்’ என கதாநாயகி டிரைலரில் பேசும் வசனம் அனைவரையும் மிரட்டி போட்டுவிட்டது. யூடியூப் கமெண்டிலேயே இது தொடர்பாக நிறைய விவாதங்கள். இந்த கதாநாயகி கதாநாயகனை சந்திக்கும்போது என்ன நடந்தது என்பதும் ‘டக்கர்’ரில் இருக்கும். வரும் ஆகஸ்ட் மாதம் வந்தால் ‘பாய்ஸ்’ படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடத்தில் நிறைய நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்த இரண்டு வருடங்களில் நல்ல படங்களில் கமிட் ஆகியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் பேசியதாவது, “’டக்கர்’ இது என்னுடைய இரண்டாவது படம். இந்தப் படத்திற்கு சித்தார்த் ஏன் என்ற கேள்வி பலரிடமும் இருந்தது. ஒரு கதை யோசிக்கும்போதே யாராவது மனதில் வருவார்கள். இந்தக் கதையில் லவ், ஆக்ஷன், இளம் தலைமுறையினருக்கான கண்டெண்ட் உள்ளது. இது அனைத்தும் சித்தார்த்திடம் உள்ளதால் அவரை தேர்ந்தெடுத்தேன். அவருக்கும் இந்த கண்டெண்ட் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் சுதன் என்னுடைய நண்பர். சுதன், சித்தார்த் என எங்கள் மூவருக்கும் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. திவ்யன்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மிகவும் தைரியமாக இந்த தலைமுறை வெளியே சொல்லத் தயங்கும் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். யோகிபாபு அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அபிமன்யு, முனீஷ்காந்த் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்திற்கு ப்ளஸ். இந்தப் படத்தில் அவரது பாடல்கள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொழில்நுட்பக் குழுவும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். முன்பே அறிவித்த இந்தப் படம், ஏன் இவ்வளவு தாமதமாக வெளியாகிறது என்று பலரும் கேட்டார்கள். இடையில் ஓடிடிக்கு கொடுத்து விடலாம் என்று கூட சிலர் சொன்னார்கள். ஆனால், இது தியேட்டருக்கான படம் என்பதால் திரையரங்குகளுக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று இருந்தோம். ஜூன் 9 அன்று வெளியாகும் படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்”.