கடந்த 1990-ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான படம் தான் என் உயிர் தோழன். தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபுவை இப்படத்தின் மூலம் கதாநாயகனாக்கினார் இயக்குனர் பாரதி ராஜா
அரசியல் கதைகளம் கொண்ட இந்த படத்தில் தர்மா என்ற தொண்டனாக முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் பாபு. அன்று முதல் பாபு, ‘என் உயிர் தோழன்’பாபு என்ற பெயருடன் அழைக்கப்பட்டார்.
தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, தாயம்மா பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்திருந்தார். இந்நிலையில் ‘மனசார வாழ்த்துக்களேன்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சண்டை காட்சி ஒன்றில் பாபு, மேலே இருந்து குதிப்பது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
இக்காட்சியில் நடிக்க இருந்த ‘டூப்’ நடிகரை வேண்டாம் என மறுத்த பாபு, மேலே இருந்து குதித்துள்ளார். ஆனால் டைமிங் மிஸ் ஆனதால், குறிப்பிட்ட இடத்துக்கு பதிலாக வேறு இடத்தில் விழுந்துள்ளார்.
இதில் அவரது முதுகெலும்பு உடைந்து நெறுங்கியது. அப்போதே பாபுவின் சினிமா கனவும் சுக்குநூறாக போய்விட்டது.அதன்பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாபு, குணமாகாததால் கடந்த 21 வருடங்களாக படுத்த படுக்கையாக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்தார், அவரது 80 வயதான அம்மா அவரை கவனித்து வந்தார் .இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் க.ராசாராமின் உறவினர் ஆவார்.
இந்நிலையில் திடீரென பாபுவின் உடல் நிலை மோசமானதால் கடந்த ஒருவாரமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் தகனம் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடந்தது என்னுயிர்த் தோழன் பாபு மறைவுக்கு பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்