ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
‘லெவன்’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி என் அழகர்சாமியும், கேரளாவில் E4 என்டர்டெயின்மென்ட்டும், கர்நாடகாவில் ஃபைவ் ஸ்டார் செந்திலும், வெளிநாடுகளில் ஏபி இன்டர்நேஷனலும் வெளியிடுகிறார்கள்.
இப்படத்தில் டி. இமான் இசையில் நான்கு வித்தியாசமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சரிகம நிறுவனம் இசை ஆல்பத்தை ஏப்ரல் 29 அன்று வெளியிடுகிறது. கபிலனின் அழுத்தமான வரிகளில் உருவான விடியாம வானம் எங்கு போச்சு எனத் தொடங்கும் பாடலை மனோ பாடியுள்ளார். படத்தின் முக்கிய கட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமான இப்பாடல் இடம் பெறுகிறது. இமானின் கால் நூற்றாண்டு திரையிசை பயணத்தில் அவரது இசையில் மனோ பாடியிருப்பது இதுவே முதல் முறை. இத்தனை வருடங்கள் கடந்த பின்னர் மிகவும் அருமையான ஒரு பாடலுக்காக இணைந்திருப்பது குறித்து இருவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழ் படமொன்றில் முழுக்க ஆங்கிலத்தில் உருவாகியுள்ள பாடலை ஷ்ருதி ஹாசன் முதன்முறையாக பாடியுள்ளார். டெவில் இஸ் வெயிட்டிங் என ஆரம்பிக்கும் இப்பாடலை இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் மூலம் தனது நீண்ட நாள் கனவு நனவாகி இருப்பதாக ஷ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
அடுத்ததாக, விஜய் மற்றும் அஜித் திரைப்படங்களுக்கு மாஸ் ஓப்பனிங் பாடல்கள் எழுதும் விஷ்ணு எடவன் எழுதிய அழகான அரக்கனா பாடலை ஜோனிடா காந்தி பாடியுள்ளார். இத்தகைய முழு நீள காதல் பாடலை விஷ்ணு எடவன் எழுதியிருப்பதும் தனியாக ஜோனிடா காந்தி பாடியிருப்பதும் இதுவே முதல் முறை ஆகும்.
ஆண்ட்ரியா பாடி தோன்றும் ‘தமுகு’ எனும் சிறப்பு பாடலும் ‘லெவன்’ படத்தில் உண்டு. ராகேண்டு மெளலி கைவண்ணத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்த பிரத்யேகப் பாடல் இணையத்தில் ஏற்கனவே வைரல் ஆகி உள்ளது.
பாடல்கள் பற்றி பேசிய இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “பரபரப்பான கிரைம் திரில்லரான ‘லெவன்’ படத்தின் கதைக்கேற்றவாறு இப்பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் வகையில் இந்த பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு பாடல்களும் படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருக்கும். முன்னணி இசை நிறுவனம் சரிகம பாடல்களை வெளியிடுவது மகிழ்ச்சி,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “டி. இமானின் பின்னணி இசை இப்படத்தில் மிகவும் பேசப்படும். பின்னணி இசையை மட்டும் தனியாக சரிகம நிறுவனம் பின்னர் வெளியிட உள்ளது,” என்றார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்துள்ளனர். பான் இந்தியா கன்டென்ட்டுடன் இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் சுந்தர் சி யிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். ‘சரபம்’, ‘சிவப்பு’, ‘பிரம்மன்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி, ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார். படத்தொகுப்பை தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. கையாண்டுள்ளார். ‘லெவன்’ திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அவர்களுக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி. அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.