
‘நஜாய் பிலிம்ஸ்’ & ‘ஃபிரோ மூவி ஸ்டேஷன்’ இணைந்து, தயாரித்த அங்கம்மாள் திரைப்படத்தை, ‘ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ வழங்கியிருக்கிறது. கீதா கைலாசம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் சரண் சக்தி, ‘நாடோடிகள்’ பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் மற்றும் வினோத் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மூலக்கதை எழுத்தாளர் பெருமாள் முருகன். திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார், விபின் ராதாகிருஷ்ணன். ஒளிப்பதிவு, அஞ்சாய் சாமுவேல். இசை மற்றும் பின்னணி இசை, முகமது மக்பூல் மன்சூர்.
திருநெல்வேலி பகுதியில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில், 1980 களில் நடப்பது போல் திரைப்படத்தின் கதை, சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் ஓரளவு, நில புல வசதியுடன் பால் வியாபாரம் செய்துவரும் (கீதா கைலாசம்) ‘ரக்கட்டான பெண்’ அங்கம்மாள். புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர். கணவனை இழந்த இவருக்கு, இரண்டு மகன்கள். மூத்த மகன் ( நாடோடிகள் பரணி ) சுடலைக்கு, திருமணம் ஆகி பள்ளி செல்லும் குழந்தை இருக்கிறது. இன்னொருவர், திருமணமாகாமல் இருக்கும் இளைய மகன் (சரண்) டாக்டர் பவளம். இவர் காதலிக்கும் பெண்ணையே திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார், அங்கம்மாள். இருந்தும் திருமணத்தில் சிக்கல் இருந்து வருகிறது. அதாவது (Blouse) ரவிக்கை அணியும் பழக்கமே இல்லாத அங்கம்மாளையும், தங்களது குடும்பத்தையும், பெண்வீட்டார் தரக்குறைவாக நினைத்து விடுவார்களோ, என அச்சமும் , கவலையும் கொள்கின்றனர். அங்கமாளின் இரண்டு மகன்களும் மருமகளும். இதனால், ‘ரக்கட் பெண்’ அங்கம்மாளை, (Blouse) ரவிக்கை அணிய வைக்க முயற்சிக்கின்றனர். இதனால், குடும்பத்தில் சச்சரவுகளும், சண்டைகளும் உருவாகிறது. அங்கமாள் ரவிக்கை அணிந்தாரா, பவளத்தின் திருமணம் என்ன ஆனது? என்பது தான், ‘அங்கம்மாள்’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
வாய் நிறைய சுருட்டுப்புகையும், கெட்டவார்த்தைகளுமாக ஊருக்குள் பால் வியாபாரம் செய்து வரும் அங்கம்மாள் கதாபாத்திரத்தில், அப்படியே பொருந்திப்போயிருக்கிறார், கீதா கைலாசம். அவர் நடித்த படங்களிலேயே, இந்தப்படம் அவருக்கு தனித்த பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. மொபெட்டில், தோழிக்கு சாப்பாடு கொண்டு போகும் போதும், அவருடன் பேசும்போதும், மருமகளை ஏக வசனத்தில் வையும்போதும், பேத்தியுடன் கொஞ்சிப்பேசும் போதும் மிகச்சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். வட்டார பாஷை, அவருக்கு வளமாக வந்திருக்கிறது. பச்சை குத்துபவருடன், வட்டார பாஷை பேசும் முதல் காட்சியிலேயே, அங்கம்மாள் கதாபாத்திரத்தை நங்கூரமிட்டு நிறுத்தியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னுடைய ஆண் சிநேகிதனின் வீட்டிற்கு, பால் விநியோக செய்யும் போது, மொபெட்டில் உட்கார்ந்தவாறே, கால்களால் பின்னோக்கி தள்ளி வந்து அவரை பார்க்கும் போதும், அவருக்கு கேசரி கொடுக்கும் போதும், எல்லை மீறாத ரொமேண்ஸ்! இளைய மகன் பவளத்திடம், மூத்த மகன் சுடலையின் படிப்பு குறித்து பேசும் காட்சி அல்ட்டிமேட்! கீதா கைலாசத்தின் நடிப்பிற்காக, வியாபாரத்திற்குள் சிக்காத விருதுகள் கொடுத்து கௌரவிக்கலாம்!
‘வடசென்னை’ சரண், டாக்டருக்கு படித்த இளைஞராக, அம்மாவின் மீது பாசம் கொண்டவராக, அண்ணன் மீது பரிதாபம் கொண்டவராக, அண்ணி மீது மதிப்பு கொண்டவராக அளவான சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மாவிற்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது. என்று வருந்தும் காட்சியும், ‘அண்ணனையும் படிக்க வச்சிருக்கலாம்ல..’ என, அம்மாவிடம் கேட்கும் காட்சியும், காதலியுடன் தியேட்டரில் காட்டும் இளமை துடிப்பு என, அனைத்து காட்சிகளிலும் நன்றாகவே நடித்திருக்கிறார்.
‘நாடோடிகள்’ பரணி. தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மாவிடம் தனது வாழ்க்கை குறித்து வாதிடுவது, மனைவியை, அங்கம்மாள் அடித்தது பற்றி வருந்துவது. ஸ்ட்ரெஸ்ஸை போக்க, தானாகவே நாயணம் கற்றுக்கொள்வதுமாக இவரும் நன்றாகவே நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.
பரணியின் மனைவியாக நடித்த தென்றல் ரகுநாதன், கீதா கைலாசத்திற்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். சரணின் காதலியாக வரும் முல்லையரசி நடிப்பிலும், அழகிலும் ரசிக்க வைக்கிறார்.
கீதா கைலாசத்தின் தோழிகள் உட்பட, அனைத்து நடிகர், நடிகைகளுமே யதார்த்தமான நடிப்பால் அசத்துகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அஞ்சாய் சாமுவேலுவின் ஒளிப்பதிவும், முகமது மக்பூல் மன்சூரின் இசையும் படத்தின் இரு கண்களாகவே இருக்கிறது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ சிறுகதையில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள். அது, ‘அங்மமாள்’ திரைப்படத்திலும் பிரதிபலித்திருக்கிறது. படத்தின் முதல், பச்சை குத்துக் காட்சியிலேயே, ஒரு கெட்டவார்த்தை இடம் பெறுகிறது. தமிழ்நாடு திரைப்பட தணிக்கை குழுவினர் (Central Board of Film Certification), அந்த கெட்ட வார்த்தையின் பொருள் தெரியாமலேயே அதற்கு அனுமதி கொடுத்துள்ளனர்.
பல நிறைகள் நிறைந்திருந்தாலும், மொபெட் ஓட்டாமலேயே, கீதாகைலாசம் வண்டியின் ஹேண்ட்பாரை ஓட்டுவது போல் அசைத்து, நடிக்கும் காட்சி, எடிட்டரையும் மீறி வந்துள்ளது ஆச்சர்யம்! ரவிக்கை அணியாததற்கான காரணம் அழுத்தமாக சொல்லப்படவில்லை. கணவனை இழந்த நிலையில் 30 வருடங்களாக, எதையும் எதிர்கொள்ளும் தைரியம் நிறைந்த பெண்ணான அங்கம்மாள், க்ளைமாக்ஸில் எடுத்த முடிவு தவறானது. பேத்தி பீடி குடிப்பது போன்ற காட்சி, எதை வெளிப்படுத்த? திரைக்கதைக்கு தடங்கல் ஏற்படுத்தாத, தேவையில்லாத காட்சி, என குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆக மொத்தம், தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய படமாக இல்லை என்றாலும், பார்த்து ரசிக்கக்கூடிய நல்ல படம் தான், அங்கம்மாள்.












