மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிப்பில், உருவாகிவரும் திரௌபதி 2′ படத்திலிருந்து “எம்கோனே ” என்ற பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில்.இந்த பாடலுக்கு தனது வசீகர குரலால் சின்மயி உயிரூட்டி இருப்பதாக வரவேற்பு ஒருபக்கம் இருந்தாலும், பெண்ணியம், முற்போக்கு பேசும் சின்மயி… சாதியவாதம் பேசும் மோகன் ஜி திரைப்படத்தில் பணியாற்றுவதா..? என்ற எதிர்மறை விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தது.
இதையடுத்து இப் பாடலை பாடிய சின்மயி, மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதாவது, அந்த பாடலை பதிவு செய்யும் நேரத்தில் படத்தின் சித்தாந்த பின்னணி குறித்து தனக்குத் தெரியாது என்றும், தெரிந்திருந்தால் பாடலை பாடியிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.
பரபரப்பு மற்றும் சர்ச்சையை ஏற்படுத்திய இப்பதிவு குறித்து ‘திரௌபதி 2’ படத்தின் இயக்குனர் மோகன் ஜி சின்மயிடம் விளக்கம் கேட்டும், உடனடியாக இப்பதிவை நீக்கக்கோரியும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவில்,”இந்தப் பாடலின் டியூனை கேட்டதும் இதற்கு சின்மயி குரல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டது நான் தான். நான் சின்மயி ரசிகன் என்பதாலும் சின்மயி பாடினால் இந்த பாடலுக்கு உயிர் இருக்கும் என்பதாலும் ஜிப்ரானிடம் நான் தான் கேட்டுக்கொண்டேன். ஜிப்ரானும் ஒப்புக்கொண்டு அவரை பாட வைத்தார்.நேற்று பாடலின் புரோமோ வெளியானதும் சின்மயியை சிலர் விமர்சிக்கத் தொடங்கினர். எனக்கு அப்பவே சின்மயி எதாவது இதற்கு ரியாக்ட் செய்வார் என்று புரிந்துவிட்டது. நான் நினைத்தது போலவே ரியாக்ட் செய்த சின்மயி இந்த பாடலை பாடியதற்காக மன்னிப்பு கேட்டார்.
மேலும் எனது சிந்தாந்தம் தெரிந்திருந்தால் நான் பாடாமல் இருந்திருப்பேன் என்றும் சின்மயி தெரிவித்தார். அவர் படக்குழுவான எங்களிடம் எந்த விளக்கமும் கேட்காமல்,சின்மயி அப்படி பேசியது அதிர்ச்சி தான். நான் கடவுள் இருக்கிறார் என்கிற சிந்தாந்தத்தை கொண்டவன். எனக்கு தெரிந்து சின்மயி கடவுள் இல்லை என்று எங்கும் பேசியதும் இல்லை. மாற்று சிந்தாந்தம் கொள்கை கொண்டவர்களுக்கு நான் பாட மாட்டேன் என சின்மயி எங்கும் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்து இருந்தால் நான் கண்டிப்பாக அழைத்திருக்க மாட்டேன். சின்மயியிடம் நான் கேட்க விரும்புவது இதுதான்.. எதற்காக நீங்கள் வருத்தம் தெரிவித்தீர்கள். யார் கொடுத்த அழுத்தத்தால் நீங்கள் இந்த மன்னிப்பு கேட்டீர்கள் என்பதை விளக்கமாக கொடுத்தால் எங்களின் படத்தின் வியாபாரத்தை அது பாதிக்காது.என்னை சுற்றியுள்ளவர்கள், எனது ஆதரவாளர்களுக்கு சின்மயி மன்னிப்பு கேட்டது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டதைப் போல் என்னை ஒதுக்கி வைத்து பேசுவது சரியல்ல. இந்திய நாட்டை தாண்டியுள்ளவர்களுக்காக நான் வேலை பார்ப்பது போல ஏன் இதனை செய்ய வேண்டும். அதனால் நீங்கள் விளக்கம் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் பதிவை நீங்கள் நீக்கவேண்டும். ஏனென்றால் இந்த விவகாரம் இந்த படத்தை வியாபார ரீதியாக பாதிக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
‘












