“நீள் துயரும் பிறவி துயரம்,
எனவே உறவே கலைந்தாயடி!
பாழ் உலகம் சுழலும் நரகம்,
எனவே அழகே கரைந்தாயடி,
தாயின் தீயில் தீய்ந்து தேய்ந்தாயடி!”—-தியாவின் கதை சுருக்கத்தை மதன் கார்க்கியின் அழகான வரிகள் விரிவாக சொல்லிவிடுகிறது. எது கல்யாணத்திற்கு பின் கொண்டாடப்படுகிறதோ அதுவே கல்யாணத்துக்கு முன்னதாக நிகழுமேயானால் பாவச்செயலாக தண்டிக்கப்படுகிறது. இதுவே ‘தியா’வின் கதைக்கு இயக்குநர் விஜய் கொண்டிருக்கும் கரு.அவரின் மனதில் ஆழப்பதிந்திருக்கும் நிகழ்வு கதைக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
அழுவதும் மகிழ்வதும் அந்த கருவுக்காகத்தான் என்பதை சாய் பல்லவி,நாக சவுரியா இருவரும் அனுபவித்து நடித்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டமில்லாமல் வெகு இயல்பாக இருப்பதால் கதையுடன் ஒன்றி விடுகிறோம். இருவரது குடும்பமும் பழகிவரும் நட்பு குடும்பம்தான். பருவ வயது ! இருவரும் இணையத்தானே போகிறோம் என்கிற எதிர்பார்ப்பில் கலந்து விடுகிறார்கள்.! கரு உருவாகிறது. அது திரு ஆவதற்கு முன்னமே கலைக்கப்படுகிறது. அழிக்கப்படும் கரு அமானுஷ்ய தியாவாக இருந்து காரணமானவர்களை பழி தீர்க்கிறது. பட்டிமன்ற தலைப்பாக கதை அமைந்து விட்டது சிறப்பு.
விஜய் ,அஜயன்பாலா இருவரும் நறுக் சுருக்கென வசனம் வழியாக சொல்லி விடுகிறார்கள் .கல்யாணத்துக்கு வந்தவர்கள் கலைந்து போகாமல் அங்கேயே தங்கி விடுவதால் நாயகனுக்கு சற்றே ஏமாற்றம். “மொட்டை மாடியிலே போய் படுத்துக்கோ” என்று அம்மா சொன்னதும் “பர்ஸ்ட் நைட்?” என்று மகன் கேட்க “போடா இதுதான் உனக்கு பர்ஸ்ட் நைட்டா?” என்று அம்மா சொன்னது நியாயமில்லை. முறைப்படி அதுவும் நடந்திருக்க வேண்டாமா? ஆனால் இயக்குநர் விஜய் என்ன நினைத்தாரோ சாய்-சவ்ரியாவை சேரவிடவில்லை.ஒருவேளை அங்கு தியாவை காட்டமுடியாதே என நினைத்திருக்கலாம்.
ஆர்.ஜே.பாலாஜிக்கு இதில் பதவி உயர்வு சப்-இன்ஸ். இவரிடம் வாங்கிக்கட்டும் எட்டையாவாக குமரகுரு. நல்ல காம்பினேசன்.
ஒளிப்பதிவு நீரவ்ஷா.ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணனின் கலைப்பதிவும் ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியவை. காலியாக இருக்கும் வீட்டில் பேசுகிற போது சற்று ஒலி மாற்றம் இருக்கும்.அந்த எதிரொலியைக் கூட சிங்க் சினிமா பதிவு செய்திருக்கிறது.
சாம் சி.எஸ். சின் இசையில் ‘யாரோ யாரோ’ என சித்ரா பாடியிருக்கிற பாடல் நெஞ்சில் குடி கொள்கிறது. கார்க்கியின் வரிகளும் காரணம்.
பார்க்கவேண்டிய படங்களில் விரும்பினால் ‘தியா’வை சேர்த்துக் கொள்ளலாம்.