நயன்தாரா, ‘யோகி’ பாபு நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் க்ரைம், பிளாக் காமெடிப்படம் ‘கோலமாவு கோகிலா’.
அறிமுக இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கிறார். உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்களைப் போலவே பல தியேட்டர்களில் அதிகாலை ஸ்பெஷல் ஷோ. எல்லா ஷோவும் ஃபுல்.
அது சரி ,படம் எதிர்பார்த்தபடி இருக்கா?
அம்மாவுக்கு (சரண்யா பொன்வண்ணன்) லங்க்ஸ் கேன்சர். அப்பா (சிவாஜி) பொறுப்பில்லாத ஏடிஎம் வாட்ச் மேன். காலேஜ் படிக்கிற தங்கச்சி (ஜாக்குலின்) இவங்களை காப்பாத்துறதுக்காக வேலைக்குப்போற நயன் தாரா தான் இந்தக் குடும்பத்துக்கு மூத்த பெண். அம்மா ட்ரீட்மென்ட்டுக்காக ‘கொக்கைன்'( கஞ்சா மாதிரியான போதைப் பொருள்.) கடத்துற வேலைக்கு போகும் அவரோட மொத்தக் குடும்பமும், ‘கொக்கைன்’ கும்பல்கிட்ட மாட்டிக்கொள்கிறது.
அதிலிருந்து வெளியே வரமுடிந்ததா இல்லையா என்பது தான் க்ளைமாக்ஸ்!
நயன்தாரா இன்ட்ரொடக்ஷன் சீனில் விசில் சத்தம் காது கிழியுது. அதே சத்தமும், கூச்சலும் ‘யோகி’ பாபு இன்ட்ரொடக்ஷன் ஆகும் போது கொஞ்சம் கூடுதலாகவே இருக்கு. எப்பவும் இயல்பா நடிக்கும் நயன்தாரா இந்தப் படத்தில்’ நடிச்சிருக்காங்க’. இயக்குனரோட விருப்பமா?.
திரைக்கதை அப்படி, இப்படி இருந்தாலும் ‘யோகி’ பாபு காமெடி அதை சரிசெய்கிறது. வழக்கமான தன்னோட பஞ்ச் டைலாக்ஸ்னால சிரிக்க வைக்கிறார். முதல் பாதியில் காணாமல் போன ‘யோகி’ பாபு திரும்ப எப்போ வருவார் என எதிர்பார்க்க வைத்துவிடுகிறார். ‘மொட்டை’ ராஜேந்திரன் ஒரு சில இடங்களில் வந்தாலும் நச்சுன்னு நாலு பஞ்ச் அடித்துவிடுகிறார்.
விறுவிறுப்பா சொல்ல வேண்டிய கதையை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் மெதுவாக நகர்த்திச்செல்கிறார். பல நல்ல நடிகர்களை வைத்துக்கொண்டு கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் கோட்டை விட்டுள்ளார். குறிப்பாக அப்பாவி நயந்தாரா செய்யும் வேலை எல்லாமே புரஃபஷனல் க்ரிமினல்ஸ் செய்யும் வேலைகள். அதேபோல் க்ளைமாக்ஸ் காட்சியில் புத்திசாலி இன்ஸ்பெக்டர் சரவணனை தத்திகளின் தலைவனாக காட்டியிருக்கிறார். இதனால் கதாபாத்திரங்களின் தன்மையில் தடுமாற்றம்..
அனிருத் இசையில் ‘கல்யாண வயசு தான்’ பாடல் மட்டும் சூப்பர்.
க்ளைமாக்ஸ் ஆகப்பெரிய பலவீனம். கோலத்துக்கேத்த வண்ணம் இல்ல.
எல்லாம் சரி.. படம் பார்க்கப் போகலாமான்னு கேட்டிங்கன்னா… யோகிபாபு, நயந்தாரா கூட்டணிக்காக போகலாம்!