‘தொட்ரா’-விமர்சனம் .
Rating; 2.5/5.
——————–
“சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்றவர் டாக்டர் அம்பேத்கர். ‘தொட்ரா’ படத்தின் தளமும் அவரது கருத்தைச் சார்ந்தே இருக்கிறது.
சமத்துவபுரத்தைச் சேர்ந்தவன் சங்கர். ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் என்கிற அடையாளம் காட்டப்படுகிறது. அவனது காதலி திவ்யா உயர்ந்த சமூகம் .ஆக கோரமாக நடந்து முடிந்த ஆணவக்கொலை சம்பவத்தை இயக்குநர் மதுராஜ் நகல் எடுத்திருக்கிறார் .யாரையெல்லாம் அடையாளம் காட்டவேண்டுமோ அவர்களையும் வெளிச்சப் படுத்தியிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் குழம்பி இருக்கிறார்.
சாதிச் சங்கத்தலைவர் கேரக்டருக்கு அருமையான தேர்வு எம்.எஸ்.குமார். தங்கையின் மீது அளவற்ற பாசம். சாதியின் மீதும் தணியாத நேசம். பாசமா, நேசமா என்கிற மனப்போராட்டத்தில் ஒரு முடிவுக்கு குமார் வந்த பின்னர்தான் மனைவியே வில்லியாக மாறுகிறாள். கதையின் நாயகனான பிருத்விராஜ்க்கு நல்ல வாய்ப்பு. திறமையாக கையாண்டிருக்கிறார். இளம் பருவத்துக்குரிய சேட்டைகள், வருத்தங்கள், எம்.எஸ்.குமாரிடம் அடிபடும் கட்டம் என அவர் துடிப்பதும் கதறுவதும் இன்னமும் காதுக்குள்ளேயே!
காதலர்களை ஒன்று சேர்ப்பதாகச் சொல்லி கோடிகளை சுருட்டுகிற கேரக்டரில் ஏ.வெங்கடேஷ்.கச்சிதம். இப்படியெல்லாமா நடக்கிறது என சிலர் கேட்டாலும் உண்மை வலிக்கவே செய்யும்!
நாயகியாக வீணா புது வரவு.நல்வரவு. அழகாகவும் இருக்கிறார். நடிப்பும் துடிப்பாகவே இருக்கிறது. வாய்ப்புகள் வரலாம்.
உத்தமராசாவின் இசையில் எஸ்.டி.ஆர். பாடியிருக்கிற ‘பக்கு ,பக்கு ‘என்கிற பாடல் இசை அமைப்பாளருக்கு புதிய பாதையை காட்டி இருக்கிறது.
சாதி மீறிய கல்யாணம் பண்ணிக் கொள்கிறவர்களை இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் நடத்துகிறார்கள், அவர்களுக்கு காவல் துறையில் சிலரும் அரசியல் தலைவர்கள் சிலரும் துணையாக நிற்கிறார்கள் என்பதை துணிச்சலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் திரைக்கதை அமைப்பில் கவனம் செலுத்தவேண்டும்.
தொட்ரா….சும்மா தொடுங்க !
2/ 5