ஒடிஷாவில் இருந்து பதற வைத்த செய்தி.
தேசப்பிதா காந்தி அடிகள் பிறந்த நாளன்று காதுகளில் அமிலம் ஊற்றிய காட்டுமிராண்டிகளைப் பற்றிய செய்தி. பிரதமர் மோடி தூய்மை இந்தியாவை வலியுறுத்திப் பேசிய நாளில் அரங்கேறிய அசிங்கம்.அருவருப்பு,அநாகரீகம், கலாசார சீர்கேடு.
அந்த கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு முதியவர்களை அவர்களது வீட்டிலிருந்து தரதர வென கிராமத்துக்கு வெளியே இழுத்துச்சென்றிருக்கிறார்கள். அந்த கிராமத்தின் மொத்த ஜனமும் கூடி நின்று வேடிக்கைப் பார்க்கிறது.
அந்த முதியவர்களின் பற்களை பிடுங்கி எறிந்திருக்கிறார்கள். அடித்திருக்கிறார்கள். பரவாயில்லை .விட்டு விடலாம் என நினைக்க முடியவில்லை. இந்த கொடுமைகளுக்கு சிகரமாக அந்த ஆறு பேரையும் மனிதக் கழிவுகளை தின்ன வைத்திருக்கிறார்கள்.வலியுறுத்தி அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.
இந்த கோரத்துக்கு என்ன காரணம்?
அந்த கிராமத்தில் ஏழு பேர் செத்து விட்டார்களாம். இதற்கெல்லாம் 60 வயதைத் தாண்டிய அந்த ஆறு கிழவர்கள்தான் காரணம் .அவர்களுக்கு மந்திர சக்தி இருக்கிறது என்று அந்த முட்டாள் காட்டு மிராண்டிகள் நினைத்தார்களாம்.
போலீஸ் விசாரணை நடத்துகிறது.