கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், மும்பையில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பை பாந்திரா ரயில் நிலையம் முன் ஆயிரக்கணக்கில் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை அம்மாநில போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலங்களில், மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சமூக விலகலை பின்பற்றாமல் மும்பையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நடிகரும், மக்கள்நீதிமய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
“மேல்தட்டு வர்க்கம் சற்று கீழ் நோக்கி பார்க்க வேண்டிய அவசியமான காலகட்டம் இது. முன்பு டெல்லி ,தற்போது மும்பையில் வாழ்வாதாரங்களுக்காக மக்கள் தினமும் போராடுகின்ற அவலநிலை. வெடிகுண்டுக்கு ஒப்பானது. இதை இப்போதே சரி செய்யாவிட்டால் கொரானாவை விட பாதிப்பு பெரிதாகி விடும் .பால்கனி அரசாங்கம் தரையில் என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்”.இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.