நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டாலும் அவரது ரசிகர்கள் சிலர் எப்படியாவது கட்சி தொடங்கிவிடமாட்டாரா என எதிர்பார்ப் பில் நேற்று வள்ளுவர் கோட்டம் அருகே ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ரஜினிகாந்த கூறியுள்ளதாவது, “என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு, நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும் மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவுகூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ், வளர்க தமிழ் நாடு, ஜெய்ஹிந்த்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.