தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில்,நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடி வரை சைக்கிளில் வந்தார் திடீரென நடிகர் விஜய்யை சாலையில், அதுவும் சைக்கிளில் பார்த்தவுடன் இன்ப அதிர்ச்சியடைந்த பலரும் அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுக்க முயற்சித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் நடிகர் விஜய்யை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வாக்களிக்க செய்தனர். வாக்குப் பதிவு செய்யும் மையத்தின் உள்ளேயும் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கேமராவுடன் வந்து விஜய்யை புகைப்படம் எடுத்ததால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர் பின்னர் காவல்துறையினர் பாதுகாப்பாக விஜய்யை வாக்களிக்க செய்து, அவரை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில்,பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்டி தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்கவே விஜய் அதிரடியாக சைக்கிளில் வந்ததாகவும், இணையதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சைக்கிளில் வந்தது ஏன் என்பது குறித்து விஜய் தரப்பு கூறியுள்ளதாவது,” விஜய் சைக்கிளில் ஒட்டுப் போட வந்ததிற்கு ஒரே ஒரு காரணம் தான். வாக்குப்பதிவு மையம் அவருடைய வீட்டிற்குப் பின்புறம் உள்ள தெருவில் இருக்கிறது. அது ஒரு சின்ன தெரு என்பதால் காரில் சென்று வருவது இடைஞ்சலாகவும் இருக்கும். ஆகையால் தான் அவர் சைக்கிளில் வந்தார். இதைத்தவிர வேறு எந்தவொரு காரணமும் கிடையாது”என்கிறது.