யெல்லோ பியர் புரொடக்சன் சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. இதில்,நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்த்ரா, அனந்த் நாக், தீனா கஜராஜ், விவேக் பிரசன்னா, பவா செல்லதுரை, அப்பாணி சரத், ரஞ்சன், பசுபதி ராஜ், ஞானவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்..இந்தப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெங்கட்பிரபு, எழில், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சித்ரா லட்சுமணன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், நடிகர் ஜெயபிரகாஷ், சிவஸ்ரீ சிவா, சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நடிகர் சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
இந்த நிகழ்வில் கதாநாயகி சுனைனா பேசும்போது, “2006ல் என்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்ற ஒரு சின்னப்பெண்ணாக இருந்தேன். அந்த சமயத்தில் சினிமாவிற்கு வருவேனா என்றெல்லாம் தீர்மானித்து இருக்கவில்லை. அப்போது விடுமுறைக்காக ஹைதராபாத்திற்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது நான் பார்த்த படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’ திரைப்படம். அதற்கு முன்பு நடிகை ஆக வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் சந்திரமுகி. தொடர்ந்து கஜினி உள்ளிட்ட படங்களை பார்த்தபோது, நான் ஒரு தென்னிந்திய மொழி நடிகையாகத்தான் ஆகவேண்டும் என முடிவு செய்தேன்.
அந்த சமயத்தில் எனக்குள்ளே சினிமா குறித்த ஆர்வம் சின்சியாரிட்டி, நேர்மை எல்லாம் இருந்தது. இப்போது வரை அது இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ், இயக்குனர் டொமின் டி சில்வா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரிடமுமே இதே போன்ற ஒற்றுமை இருந்தது. இந்த நிகழ்விற்கு வெங்கட் பிரபு சார் வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அவருடைய சரோஜா படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகை. எனக்கு எப்போதெல்லாம் மனதில் வருத்தம் தோன்றுகிறதோ அந்த சமயத்தில் சரோஜா படத்தில் வரும் பிரம்மானந்தம் சார் நடித்த காமெடி காட்சிகளை பார்த்து ரசிப்பேன். நான் மட்டுமல்ல.. என் குடும்பமும் சேர்ந்து தான். இந்தப்படத்திற்காக அதிக அளவில் அன்பையும் உழைப்பையும் கொடுத்துள்ளோம்” என்றார்




