மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது,இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் முன்பு மேடையில், பேசிய மாரி செல்வராஜ்,தேவர் மகன் திரைப்படம் தனக்குள் மனபிறழ்வை உண்டாக்கியது.
அந்த படம் சரியா… தவறா என புரியாமல் மனதிற்குள் அப்படி ஒரு வலியை ஏற்படுத்தியது என்று கமலின் முன் பேசியாது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சமூக வலைதளங்களில் இவ்விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து ,அப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகனுக்கும், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேவர் மகன் படம் வெளியான நேரத்தில், அப்படம் குறித்து மாரி செல்வராஜ், கமல்ஹாசனுக்கு, அப்போது அவருக்கு தோன்றியதை ஒரு கடிதமாக எழுதி இருக்கிறார்.இது நடந்து பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதைப் பிடித்துக் கொண்டு, அப்போது ஏன் அப்படி எழுதினாய் என்று கேட்பது சரியா? மனிதர்கள் மாறுவதில்லையா?. என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து, இயக்குனர் மாரி செல்வராஜ் விளக்கமளிக்கையில், “நான் மாமன்னன் படத்தின் கதையை எழுதுவதற்கு காரணம், தேவர் மகன் படத்தில் வடிவேலு நடித்த இசக்கி கேரக்டர்தான். எனக்கும் கமல் சாருக்கும் இடையே நடந்த உரையாடல், என் எமோஷன். மாமன்னன் படம் பற்றி பேசும்போது இசக்கி கேரக்டர் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அதனால் அந்த மேடையில் அப்படி பேசினேன் கமல் அதை புரிந்து கொண்டார் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், அப்படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி கமல் சாருக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமன்னன் திரைப்படத்தை பார்த்ததோடு இசை வெளியீட்டு விழாவிலும் பங்கேற்று உணர்வுப்பூர்வமாக பாராட்டிய உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ‘மாமன்னன்’ படக்குழுவினர் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார்.