தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர் சந்தானம், அவரது நடிப்பு, காமெடிக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, தனது தனித்திறமையால் இப்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்கிறார். அவரது ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் வாய்ப்பு தந்து, தன்னுடன் நடிக்க வைத்த சிலம்பரசன் TR மீது, எப்போதுமே அவருக்கு தனி பாசம் உண்டு. சமீபமாக தனி ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த சந்தானம், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் TR உடன், அவரது அடுத்த படமான #STR49 படத்தில் இணைந்து நடிக்கிறார். இந்த செய்தி, இருவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சந்தானம் கூறியுள்ளதாவது, ” ஒருநாள் சிம்பு எனக்கு போன் செய்து, ‘படம் ஒண்ணு பண்ணுறேன். அதுல நீங்களும் நடிக்கணும்’னு கேட்டார். அவர் கேட்டார்னா ‘யெஸ்’தான். அதுக்கு மேல ஒண்ணும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இடத்துல அவரை வச்சிருக்கேன். சிம்பு எப்போது கேட்டாலும் ‘நோ’ சொல்ல மாட்டேன். என்னோட ஆரம்பத்துல இருந்து அவருக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். அவர் படத்திற்குக் கேட்ட சமயத்தில் நானும் அடுத்து ஒரு படம் தொடங்குறதுக்கான வேலைகள்ல மும்முரமா இருந்தேன். அந்தத் தயாரிப்பாளரிடம் ‘சாரி’ கேட்டுட்டு, இப்ப சிம்பு படத்துக்கு வந்துட்டேன். எங்கள் அதிரடியையும் அந்தப் படத்தில் எதிர்பாருங்கள். என்று கூறியுள்ளார்.