உண்மை நிகழ்வுகளை சற்றே ,கவனிக்க சற்றே…. கற்பனை கலந்து கொடுப்பது வாசிப்பவர்களின் அலுப்பு போக்குவதற்கே…!
இந்த நெடுந்தொடர் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கவர்ந்ததால் புத்தகமாகவும் வந்தது. தற்போது ‘சினிமா முரசம் ‘சகோதர சகோதரிகளுக்காக புதுப்பிப்பதில் மகிழ்ச்சி.
கலைப்புலி தாணு ,விக்ரம் ,அஜித்,சரத்குமார்,வி.ஞானவேலு,வி, ஜெயபிரகாஷ் ஆகிய திரை உலக பிரமுகர்கள் வாழ்த்துகளை வழங்கி வரவேற்றிருந்தனர்.
இனி தினமும் வீரப்பனை சந்திக்கலாம்.
1.மீசை மேல் காதல் கொள்ளடி!
பொட்டுப பொட்டாக மழை இறங்கியது. இராத்திரி மழை என்பதால் கனக்குமோ, வெறிக்குமோ என்பது தெரியாமல் பலர் குடிசைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.
கல்யாணம் முடிந்து ஒரு மாதம்தான் ஆகி இருந்தது. இதுவரை சாராயத்தை மறந்திருந்த மாயனுக்கு இரண்டு கிளாஸ் உள்ளே போனால் தான் தூக்கம் வரும் போலிருந்தது. சின்ன குடிசைக்குள் விலகிப் படுத்திருந்தாள் பஞ்சவர்ணம். குறுக்கே உலக்கை. மூன்று நாளோ,ஐந்து நாளோ இருவருக்குமே கஷ்டம்தான்!
மனைவியின் நெருக்கத்தினால் சத்தியத்தை காப்பாற்றி வந்த அவனை அன்று காலையில் ஏற்பட்டிருந்த இடைவெளி கவிழ்த்து விடும் போலிருந்தது.
எப்படி வெளியே செல்வது என்பது புரியாமல் நெளிந்து கொண்டிருந்தவனை பஞ்சவர்ணம் பார்வையால் கட்டி வைத்திருந்தாள்.இன்னும் எவ்வளவு நேரம்தான் தூங்காமல் அவனைக் கண்காணிக்க முடியும்? தன் மீதே அவளுக்கு எரிச்சல் வந்தது.
“சனியன்,! பொம்பளையா பொறந்துட்டா மாசந்தோறும் ஒதுங்கி உக்காரனுமா? என்ன கருமாயம் பண்ணினேனோ ,தாலி கயித்திலே உள்ள மஞ்ச கூட நெறம் மாறல.புருசனை விட்டு ஒதுங்கி உக்காந்திட்டேனே” என்று புலம்பித் தவித்தாள்.
புலம்பல் மாயனுக்கும் கேட்டது.
முதலிரவன்றே சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான் “இனிமே பீடி சாராயத்தை தொடவே போவதில்லை”என்று! அந்த சத்தியத்தை தனிமையும் மழையும் கெடுத்துவிடும் போலிருக்கே!
“அவள் வேண்டும். ஆனால் ‘அது’ முடியாது.பஞ்சவர்ணம் அனுமதிக்க மாட்டாள்.சாராயம் கிடைக்கும் வெளியே போகவிட மாட்டாள்.!
அவனைத் தனிமையும் குளிரும் வாட்டி வதைத்தது.விருட்டென்று எழுந்தவன் துண்டை உதறினான்.தலையில் சுற்றிக்கொண்டு அவளைப் பார்த்தான்.
“இன்னிக்கி மட்டும் பஞ்சு….! என்னால் சும்மா இருக்க முடியல..ஒரே ஒரு கிளாஸ் மட்டும் ஊத்திக்கிட்டி ஓடியாந்திறேன்.இல்லேன்னா என்னால தூங்க முடியாதுடி!…பஞ்சு..பஞ்சு !”என்று கெஞ்சினான்.
முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட பஞ்சவர்ணம் ” வேணாம்யா, சாமிய மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டே தூங்கு ” என்றாள்.
“சாமிய கும்புடுற நேரமாடி இது. ஏறவிட்டு ஏணிய எடுத்த கதையாகிப்போச்சே…..நேத்துவரை சந்தோஷமா இருந்திட்டு இன்னிக்கி தனியாப் படுடான்னா எப்படிடி படுப்பேன்.படுத்தாலும் ஒறக்கம் வருமா….ஒரு கிளாஸ் அடிச்சிட்டு வந்திட்டேன்னா உனக்கும் தொந்தரவு இல்ல.எனக்கும் இம்சை இல்ல.ஒறங்கிடுவேன்”!
“சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கே…மீறுனா சாமி குத்தம் வந்திரும். புள்ளையே பொறக்காமப் போனாலும் போயிரும்யா!”
“ஆமா …பொல்லாத சாமி குத்தம்…சத்தியம் சக்கரை பொங்கல் விடிஞ்சா வெம்பொங்கல்னு சும்மாவா சொல்லி இருக்கானுக. வீணா மனசப் போட்டு வொலப்பாதே! நிம்மதியா படு. நான் ஒரு எட்டு போயிட்டு வந்திர்றேன் !”
அடி எடுத்து வைத்தவனை எட்டிப் பிடிக்கிறாள். தலையில் சுற்றி இருந்த துண்டுதான் சிக்கியது.அவனும் ஒரே தாவலில் வெளியில் போய் நின்றான்.
குடிசையின் கதவுப்பக்கமாக போன பஞ்சவர்ணம் வெளியில் இருந்தவனை பார்த்து கை எடுத்து கும்பிடுகிறாள்.
“வந்திர்யா…..!”
“போ…டீ!”
“சுயபுத்திதான் இல்ல. சொல்புத்தியாவது கேக்கணும்.எதையுமே கேக்கமாட்டேன்னா ..போ!..பட்டுத்தான் திருந்துவே!….. எங்கிட்டு சுத்தினாலும் கடேசில அம்மனை கும்பிட இங்கதானே வரனும் .வருவேல்ல…அப்ப வச்சிக்கிறேன் மாப்ள கச்சேரிய!”
மூங்கில் தப்பைகளிலான கதவை இழுத்துச் சாத்தினாள்.
நிறை போதையில் நேரம் சென்று திரும்பிய மாயன் நல்ல பிள்ளையாக வெளித் திண்ணையிலேயே முடங்கிப் போனான்
எவ்வளவு நேரம் பஞ்சு அழுதாளோ தெரியாது. அவளும் தூங்கிப் போனாள்.
விடிந்தது,
நாளை தொடரும்!