வீரப்பனுக்கு பைனாகுலர் கண்கள். இல்லாவிட்டால் அடர்ந்த கானகத்தினூடே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அரையிருட்டாய் கிடக்கும் முள்ளுக்காட்டில் எவரோ இரண்டு பேர் நடந்துபோய்க் கொண்டிருப்பது இந்த பாவியின் கண்களில் பட்டிருக்குமா?
பேசுவது காற்றில் கலந்து போய் அவர்களின் காதுகளில் விழுந்து விடக்கூடாது காற்று வீசும் திசையை அறிந்து கொண்டான்.மெதுவாக கோவிந்தனை கூப்பிட்டு இலக்கைச்சுட்டிக் காட்டினான். ” அந்த ரெண்டு பயல்களையும் புடிச்சாந்திரு, போலீசுக்கு வொளவு சொல்ற பயலுங்களா இருந்தாலும் இருக்கும்!”
புலி பம்முவது மாதிரி சேத்துக்குளி பார்த்துப் பார்த்து பாதம் வைத்துப் போனான்.
அந்த இரண்டு பேரையும் துண்டினால் கையுடன் கை சேர்த்து கட்டி இழுத்து வந்து வீரப்பன் முன்பாக தள்ளினான்.
புளிய விளாறு கொண்டு இருவரையும் இறுக்கிய இறுக்கில் சிறுநீர் கழித்து விட்டார்கள்.உடம்பெல்லாம் தடிப்புகள்.
“அய்யா …..நா ஆத்தூர் ராசப்பா மவன் காளியப்பன்.” என்று ஒருவன் தரையில் புரண்டு அழ,மற்றவன் “நா கருப்பணன் மவன் வீரன்.ஆடு மேய்க்கிறவனுங்கய்யா..”என்று கதறி அழ எவரும் இரக்கப்படவில்லை.
“ஆடு மேய்க்கிறவனுங்களுக்கு இங்கென்ன சோலி? ஆட்டையும் காணோம் ,மேட்டையும் காணோம்….?எனக்கே காது குத்துறியா? குருநாதா.. இங்க வா.! இவனுங்க வாய்ல துணிய வச்சு அடைச்சி கைய கால கட்டிப் போடு! காரியத்தை முடிச்சிப்போட்டுட்டு அப்புறம் இவனுங்களை பாத்துக்கலாம்” என்று ஆத்தூர் கோபாலனை காவலுக்கு வைத்து விட்டு கிளம்பினார்கள்.
ஹொகேனக்கல்லில் இருந்து ஆலம்பாடி ரோடு வழியாகத்தான் போலீஸ் கோஷ்டியினர் கோபிநத்தம் திரும்பமுடியும். வேறு வழி இல்லை.
ஆலம்பாடி ரோட்டில் வசமான ஒருஇடத்தை தேர்ந்தெடுத்தான். அங்கு ஆட்களை நிறுத்தினான். வளைவான இடத்தில் வாகனங்களை வேகமாக திருப்ப முடியாது.ரிவர்சில் திரும்புவதற்கும் நேரம் எடுக்கும்.அந்த இடம்தான் அவனது போர்க்களம். குறுக்கே பெரிய கற்களைப் போட்டு தடை ஏற்படுத்தினர். அவர்களுக்கு வசதியாக வளைவில் 60 அடி உயரத்துக்குப் பெரிய பெரிய பாறைகள் ! .மறைந்திருந்து குறி பார்த்து சுட முடியும்!
ஒவ்வொருவரும் மறைந்து கொண்டார்கள்.
நேரம் ஆகியது.!
மணி ஒன்று…இரண்டு..மூன்று என போய்க் கொண்டிருந்தது. சூரியனும் சாயத் தொடங்கினான்.
அதோ..தொலைவில் ஜீப்.
மணி 3.25.
வீரப்பன் உஷார். பார்ட்டிகளும் உஷார்! இரட்டைக்குழல் துப்பாக்கியில் ஜீப்புக்கு குறி வைத்தான். சாலையின் குறுக்கே கிடக்கும் பாறைகளைப் பார்த்ததும் அவர்கள் எங்கே ஜீப்பை நிறுத்துவார்கள் என வீரப்பன் அனுமானித்திருந்தானோ அந்த இடத்தை ஜீப் நெருங்கியது.
ஜீப்பை ஓட்டிவந்த எஸ்.ஐ. கிருஷ்ணா பக்கத்திலிருந்த எஸ்.ஐ.சந்திரப்பாவைப் பார்த்தார் . “சம்திங்.ராங். நாம்ப மாட்டிக் கிட்டோம்!”என்று கலவரத்துடன் ஜீப்பை நிறுத்த,…
மறுவினாடியே பட்..பட்டென துப்பாக்கிக்குண்டுகள் சீறி வந்தன.அரசும்,சந்திரப்பாவும் மின்னல் வேகத்தில் குதித்து,பாதுகாப்பாக,ஜீப்பின் பக்கவாட்டில் பதுங்கிக் கொள்ள ஜீப்புக்கு ள் இருந்தவர்களால் பத்திரமாக வெளியில் வரமுடிய வில்ல.எதிர்த்து சுடவும் முடியவில்லை.அர்ஸ்,சந்திரப்பா இருவரும்தான் சுட்டுக்கொண்டிருந்தனர்.
நாளை எத்தனை பேர் காவு?