மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது மாணவர்கள் தாக்கப்பட்டனர். இச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்து பல அரசியல் கட்சியினரும்போராட்டங்கள் மேற்கொண்டனர். திமுக சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது.
தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.அதன்படி இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கியது. தொடர்ந்து வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடக்க உள்ளது.
இன்று காலை சென்னை கொளத்தூரில் கையெழுத்து இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வீதி வீதியாகச் சென்று மக்களிடம் கையெழுத்து பெற்றார். இதே போல, திமுகவின் தோழமை கட்சித் தலைவர்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, கி.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கையெழுத்து முகாம்கள் அமைக்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை கையெழுத்து பெறப்பட்டு , ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.