பெங்களூரு சிறையில் அடைக் கப்பட்டுள்ள சசிகலா 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலையாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பரில் அவர் விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்சநீதிமன்றம், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில்,ஜெவின் உயிர்த்தோழி சசிகலா, அவரது உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதையடுத்து சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சிறை தணடனை அனுபவித்து வருகின்றனர்.
மூவரின் தண்டனை காலமும் நிறைவடைய உள்ள நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி மூவரும் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது. இதையடுத்து சுதாகரன் தரப்பில் கடந்த மாதம் அபராதத் தொகையான ரூ.10கோடியே 10 ஆயிரம், கடந்த 18ம் தேதி சசிகலாவின் அபராதமாக ரூ.10 கோடியே 10 ஆயிரம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.சசிகலாவை தொடர்ந்து இளவரசி தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை நேற்று செலுத்தினார்.
இதையடுத்து சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி கே.சிவராமா சசிகலாவை விடுதலை செய்வதற்கு தடையில்லை என்பதற்கான ஆணையை சிறைத்துறைக்கு வழங்கினார்.இந்நிலையில், சசிகலாவின் தரப்பில் தனக்கு சிறைத்துறை விதிமுறைகளின்படி 126 நாட்கள் சலுகை வழங்க முடியும். எனவே முன்கூட்டியே தன்னை விடுதலை செய்ய வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட நாளில் இருந்து கணக்கிட்டால், 2021ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியுடன் 4 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவடைகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சசிகலா 100க்கும் மேற்பட்ட விடுமுறை நாட்களில் சிறையில் இருந்துள்ளார். அந்த நாட்களில் இருந்து பரோலில் சென்ற 17 நாட்களை கழித்தால் ஜனவரி 27ம் தேதிக்கு முன்பே அவரை விடுதலை செய்ய வேண்டும். மேலும் சசிகலா சிறையில் தொலைதூர கல்வி மூலம் கன்னடம் பயின்றுள்ளார். சிறை நன்னடத்தை விதிகளின்படி அதனை கணக்கிட்டால் ஒரு மாதம் வரை சலுகை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு அதிகாரம் இருக்கிறது.அதன்படி,
சசிகலா சிறையில் இருந்த 35 நாட்கள், சிறையில் கழித்த 100 விடுமுறை நாட்கள், கன்னடம் கற்றதற்கு 10 நாட்கள் என மொத்தமாக கணக்கிட்டால் அவர் 2021ம் ஆண்டு பிப்ரவரி 14ல் இருந்து 145 நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது காலம் கடந்த முடிவென்பதால் டிசம்பரில் அவரை விடுதலை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.